உயிரிழந்த பிரபாகரன் மற்றும் அவருடைய மகன் சதீஷ்குமார்
உயிரிழந்த பிரபாகரன் மற்றும் அவருடைய மகன் சதீஷ்குமார் file image
தமிழ்நாடு

சென்னை: தந்தையைக் கொலை செய்த இளைஞரை 22 ஆண்டுகளுக்குப் பிறகு பழி தீர்த்த மகன் - அதிர்ச்சிப் பின்னணி?

PT WEB

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் செய்யா என்கிற செழியன் (59). இவர் கடந்த 2001ஆம் ஆண்டு பிரபாகரன், பாபு  ஆகிய இருவரையும் கொலை செய்து விட்டு ஆயுள் தண்டனை பெற்றவர். சுமார் 19ஆண்டுகள் தண்டனை அனுபவித்து  விட்டுக்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புழல்  சிறையிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் செங்குன்றம் அருகே உள்ள வட பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக  பணியாற்றி வந்தார். நேற்றிரவு வழக்கம் போலப் பணி முடித்து விட்டு வீடு திரும்பிய செழியனை மர்ம கும்பல் வழி மறித்து சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த செங்குன்றம்  போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செழியனை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செழியன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

சதீஷ்குமார்

இது குறித்து செங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில்  செழியனைக் கொலை செய்ததாகக் கூறி, சதீஷ்குமார், அப்பு, விஷால், மகேஷ் ஆகிய 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

உயிரிழந்த பிரபாகரன்

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரன் என்பவரைக் கடந்த 2001ஆம் ஆண்டு செழியன் கொலை செய்ததும், அதற்குப் பிரபாகரனின் மகன் சதீஷ்குமார்  பழிக்குப் பழியாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தையைக் கொலை செய்த நபரை  22 ஆண்டுகள் கழித்து மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.