தமிழ்நாடு

காஞ்சிபுரம் தெப்பக்குளத்தில் குடி போதையில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

PT


காஞ்சிபுரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நண்பர்களுடன் மதுபோதையில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட மாகாளியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி என்பவருடைய மகன் தினேஷ். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மது அருந்திய தினேஷ் தனது நண்பர்கள் மூன்று பேருடன் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள சங்கர மடத்தின் மகாப்பெரியவர் மணிமண்டபம் கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்துள்ளார்.

ஏற்கனவே மது போதையிலிருந்த தினேஷ் ஆழமான பகுதிக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறி அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மணிமண்டபத்தின் நிர்வாகிகள் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.