தமிழ்நாடு

கிணற்றில் நீச்சல் பயின்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

Rasus

கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெரம்லூர் மாவட்டம் பெண்ணங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஆகாஷ் (19). இவர் ராமநத்தம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். செந்தில்குமார் தொழுதூரில் உள்ள மாமனார் தங்கவேல் என்பவரின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அப்போது செந்தில்குமார், ஆகாஷ், தங்கவேல், ஆகாஷின் தம்பி ஆகியோர் அருகில் உள்ள வைத்தியநாதபுரத்தில் தங்கவேலுக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆகாஷ் அதே கிணற்றில் இடுப்பில் கயிறு ஒன்றினை கட்டிக்கொண்டு நீச்சல் கற்றதாக கூறப்படுகிறது. அனைவரும் கிணற்றை விட்டு வெளியே வந்தபோது, ஆகாஷ் மட்டும் தொடர்ந்து நீச்சல் கற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் கிணற்றுக்குள் மூழ்கி சென்றதால், மேலே இருந்தவர்கள் ஆகாஷை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேரத்திற்கு பிறகு ஆகாஷ் உடலை மீட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். போலீசார் இறந்து போன ஆகாஷின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.