crime
crime freepik
தமிழ்நாடு

நடுரோட்டில் கிடந்த மனித தலை... அலறியடித்து ஓடிய மக்கள் - சேலத்தை நடுங்க வைத்த சம்பவம்?

PT WEB

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் குள்ளம்பட்டி என்ற பகுதியில் சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் மனித தலை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் மனித தலையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் வேறு ஏதேனும் உடல் பாகங்கள் கிடக்கிறதா? என்ற சந்தேகத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பதும், அவர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பதும், சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமினில் வந்து இந்த கொலையைச் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, திருமலை கொலை செய்த நபர் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பேளூர் சாலையில் உள்ள அக்ரஹாரம் ஏரியில் கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நடுரோட்டில் மனித தலை கிடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.