பவுசியா - ஆஷிக்
பவுசியா - ஆஷிக்  file image
தமிழ்நாடு

காதலியை கொலை செய்துவிட்டு "வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்" வைத்த காதலன்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

PT WEB

கேரளாவைச் சேர்ந்தவர் பவுசியா [20]. இவர் குரோம்பேட்டையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி, அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். பவுசியா தனது சொந்த ஊரைச் சேர்ந்த  ஆஷிக் என்பரை கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்ததாகக்  கூறப்படுகிறது.

வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ்

இந்தநிலையில் நேற்று குரோம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் அறை  எடுத்துத் தங்கியுள்ளனர்.  அறையிலிருந்த போது பவுசியா, தனது காதலன்  ஆஷிக்கின் செல்போனை எடுத்துப்  பார்த்துள்ளார். அதில் பல பெண்களுடன் ஆசிக் இருக்கும் வீடியோ இருந்ததால் அது குறித்து ஆஷிக்கிடம் கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிக் தனது டி- சர்ட்டால்  பவுசியாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்த போட்டோவை வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  பவுசியாவின் நண்பர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த பவுசியாவின் உடலை மீட்டு  பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பவுனியா

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆஷிக்கின் செல்போன் சிக்னலை வைத்துத் தேடிய வந்த நிலையில் பல்லாவரத்தில் வைத்து ஆஷிக்கை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் 5 வருடங்களாகக் காதலித்து வந்ததும், இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பிறந்து காப்பகத்தில் வளர்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், அவ்வப்போது அறை எடுத்துத் தங்குவது வழக்கம் என்பதும், அதே போல் நேற்று தங்கிய போது, செல்போனில் பல பெண்களுடன்  இருப்பதைப் பார்த்ததால் ஏற்பட்ட சண்டையில் கொலை நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆஷிக்

நர்சிங் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.