தமிழ்நாடு

17 வயதில் கையில் குழந்தை.. திருமணம் செய்ய மறுக்கும் இளைஞரால் தவிக்கும் சிறுமி!

webteam

திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அப்போது, ராமாபுரம் டி.எல்.ஏ., வளாகத்தில் உள்ள கேன்டீனில் வேலை செய்யும் 28 வயதான அம்பூரூஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்துவந்த நிலையில், நெருங்கி பழகியதால், 17 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அம்பூரூஸிடம் தெரிவித்தபோது, “யாரிடமும் கூற வேண்டாம், நான் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன்” என சிறுமியிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதையடுத்து, தனக்கு தொப்பை வந்துள்ளதாக அனைவரிடமும் சிறுமிக் கூறி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதால், தனது தாயாருடன் சின்ன போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்தபோது, சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அம்பூரூஸ் குறித்து தனது தாயாரிடம், சிறுமி தெரிவித்துள்ளார். அவர் அம்பூரூஸிற்கு ஃபோன் செய்து கேட்ட போது, திருமணம் செய்ய முடியாது என மறுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின்பேரில் மருத்துவமனைக்குச் சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறுமியை கர்பமாக்கி குழந்தையை கொடுத்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஆம்புரூஸ் என்ற வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.