death
death pt desk
தமிழ்நாடு

சென்னையில் காதலால் ஏற்பட்ட கைகலப்பு: பெண் வீட்டாரின் ஆத்திரத்தால் காதலனுக்கு நேர்ந்த கொடூரம்

webteam

செய்தியாளர் - சாந்தகுமார்

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (22). இவர் அதே பகுதியில் அண்ணா தெருவில் வசிக்கும் கோவிந்தன் என்பவரது மகள் நதியா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு இவர்களின் காதல் விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜீவா தனது நண்பர்கள் ஐந்து பேருடன் பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துவிட்டு வந்துள்ளார்.

சம்பவம் நடந்த குண்டுமேடு சுடுகாடு

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை கோவிந்தன், விஜய் மற்றும் சிலரோடு இணைந்து (மொத்தம் 5 பேர்), ஜீவாவை குண்டுமேடு சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்று அவரை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை சுடுகாட்டில் ஒருவர் இறந்து கிடப்பதாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.