கரூர்
கரூர் முகநூல்
தமிழ்நாடு

கரூர் அரசு மருத்துவரின் மகன் போதை மறுவாழ்வு மையத்தில் மரணம்

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கரூர் மாவட்டத்தினை சேர்ந்தவர் இளைஞர் கிஷோர் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வந்துள்ளார். கல்லூரியில் பயின்று வந்த இவருக்கு போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களாக அப்பழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலிருந்து அவரை மீட்க கரூர் அரசு மருத்துவரான கிஷோரின் தந்தை கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் மகனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். கிட்டதட்ட 1 மாத காலம் கிஷோர் அங்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

Helping hands - போதை மறுவாழ்வு மையம்

இந்நிலையில், நேற்றைய (29.03.2024) தினம் தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூச்சலிட்ட கிஷோர், அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் சிலரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் அந்த ஊழியர்கள் கிஷோரின் கை கால்களை கட்டி அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் இது எதற்கும் அவர் இணங்காததால் துணியால் அவரின் வாயை அடைத்துள்ளனர். ஊழியர்களின் இதுபோன்ற செயல்களால் அடுத்த சில மணி நேரங்களிலேயே கிஷோர் மூச்சுத்திணறலால் அவதியடைந்துள்ளார்.

இதை அறிந்த அந்த ஊழியர்கள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த கிஷோரின் தந்தை, தன் மகனின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போதை மறுவாழ்வு மையத்தின் காப்பாளர் அரவிந்த் ஹாரி, மனநல ஆலோசகர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போதை பழக்கத்தில் இருந்து மகனை மீட்க நினைத்த பெற்றோருக்கு, இறுதியில் மகனின் உயிரையே மீட்க முடியாமல் போனது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.