தமிழ்நாடு

மனைவியின் பிரிவு; காதல் தோல்வி விரக்தி - போனில் பேசியபடியே இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Sinekadhara

கோபிசெட்டிபாளையம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஹோட்டல் மேனேஜர், கேரளாவில் உள்ள உறவினருடன் வீடியோகால் பேசியபடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தலைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரியாஸை விட்டு அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றார். இதையடுத்து ரியாஸ் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் பஜனை தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வேலை தேடிவந்துள்ளார்.

இந்நிலையில் ரியாஸ் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால், அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமானதால் ரியாஸ் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், ரியாஸ் இரவு தனது உறவினர் நிஷாத் என்பவருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் காதலித்த பெண் வேறு நபரை திருமணம் செய்துகொண்டதால் என்னால் வாழ முடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் நிஷாத், ரியாஸை சமாதானப்படுத்தியுள்ளார். இதையடுத்து வீடியோ காலில் பேசியபடியே ரியாஸ் ஃபேனில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கியிருக்கிறார். இதையடுத்து அவரது உறவினர் செய்வதறியாது திகைத்து நிற்கையில் ரியாஸின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் நிஷாத் தொடர்ந்து செல்போனில் அழைத்துப் பார்த்திருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டின் அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரமாக ரியாஸ் அறையில் செல்போன் ஒலித்துக் கொண்டிருந்ததால் அங்கு சென்று பார்த்திருக்கின்றனர். அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது அங்கு ரியாஸ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரியாஸை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை பரிசோதனை செய்தமருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.