இரண்டு நாட்களாக சாலையில் படுத்துக்கிடந்த முதியவரை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து உணவு கொடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இளைஞர்கள் சேர்த்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் கடந்த இரு தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உடலில் காயங்களுடன் சாலையோரம் படுத்துக் கிடந்த முதியவர் குறித்து சமுக வலைதளங்களில் செய்தி பரவியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக அதே இடத்தில் படுத்துக் கிடந்த முதியவரை கண்ட செஞ்சியை சேர்ந்த பசியில்லா மனிதர்களின் குழுவை சேர்ந்த அரபாத், கலீல் ஆகிய இளைஞர்கள் மற்றும் அவ்வழியாக சென்ற ஜெகநாதன் என்பவரும் முதியவரை பேருந்துநிழல் குடைக்கு அழைத்து வந்து குளிக்க வைத்து உடலில் ஏற்பட்ட காயங்களை துடைத்து, புத்தாடை அணிவித்து உணவு ஊட்டி முதியவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
பின்னர், முதியவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 வாகனத்தில் அழைத்துச் சென்று முதலுதவி செய்யப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பொது மக்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.