தமிழ்நாடு

பறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..!

webteam

புதுக்கோட்டையில் பறவைகளுக்கு பயன்படக்கூடிய வகையில் குறுங்காடு அமைக்கும் பணியில், பசுமை பறவைகள் அமைப்பினர் ஈடுபட்டது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி வீசியது. இதனால் பசுமை நிறைந்த மாவட்டமான புதுக்கோட்டை மரங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் புயலால் விழுந்த மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை பசுமை பறவைகள் என்ற அமைப்பு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த பட்சம் 50 க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு பசுமையை மீட்டு வருகின்றனர்.

மேலும் பறவைகளுக்கு பயன்படும் வகையில் குறுங்காடுகளையும் அமைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பசுமை பறவைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அன்னை யூத் மொமன்ட், டான் போஸ்கோ அமைப்பினருடன் இணைந்து பறவைகளுக்கு பயன்படக்கூடிய பல்வகையான நாட்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.