தண்டவாளத்தில் குதித்த நபர்
தண்டவாளத்தில் குதித்த நபர் புதியதலைமுறை
தமிழ்நாடு

நடைமேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்.. உயர் மின் அழுத்த கம்பியை பிடித்ததால் நேர்ந்த பரிதாபம்!

யுவபுருஷ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தில் இருந்து மேடை ஒன்றில் இளைஞர் ஒருவர் குதித்துள்ளார். அப்போது, குறுக்கே இருந்த உயர் மின் அழுத்த கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் படுகாயமடைந்து கீழே தண்டவாளத்தில் விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்து தண்டவாளத்தில் கிடந்த அந்த நபரை மீட்ட போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவர் யார் என்ற கோணத்தில் விசாரிக்கையில், ஜார்க்கண்ட் மாநிலம் பர்மசியா மாவட்டத்தைச் சேர்ந்த குணால் பாஸ்கி(33) என்பது தெரியவந்தது. இதற்கிடையே அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக குணால் பாஸ்கி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரயில்வே உயர் மின் அழுத்த கம்பியை பிடித்ததால், குணால் பாஸ்கியின் உடலில் இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதி முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு கருகியுள்ளது. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான முறையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, பாஸ்கி மனநலம் பாதிக்கப்பட்டவரா?, எதற்காக அரக்கோணம் வந்தார் என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.