தமிழ்நாடு

பணத்திற்காக தம்பதியை கடத்திய யோகா ஆசிரியர்கள் கைது

webteam

ஐதராபாத்தில் பணத்திற்காக யோகா ஆசிரியர்களால் கடத்தப்பட்ட  தம்பதி திருவண்ணாமலையில் மீட்கப்பட்டனர். தம்பதிக்கு போதை மருந்து கொடுத்து, 2 லட்சம் ரூபாய் வரை பறித்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
திருவண்ணாமலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள சைபராபாத் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜெகதீஷ்கண்டி - கிரண்மாய். இருவரும் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இருவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யோகா பயிற்றுவிக்கும் உஷாஸ்ரீநம்மியின் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளனர்.
உஷாஸ்ரீநம்பி,‌ தொலைக்காட்சி ஒன்றில் யோகா தொடர்பான நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஒருமாதமாக தம்பதியர் யோகா பயிற்சி சென்ற நிலையில், அவர்கள் கடத்தப்பட்டதாக மாதம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 3 தனிப்படை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடத்தப்பட்டவர்களும், கடத்தியதாக கூறப்படுபவர்களும் திருவண்ணாமலை கோயிலுக்கு முன் எடுத்த புகைப்படத்தை முகபுத்தகத்தில் பதிவேற்றியிருந்தனர். இந்தநிலையில், திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் உஷாஸ்ரீநம்மியையும், ஸ்ரீகாந்தரெட்டியையும் கைது செய்து கடத்தப்பட்ட தம்பதியை மீட்டனர். கடத்தல்காரர்களிடம் இருந்து 20சவரன் நகை மற்றும் விலையுயர்ந்த கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தம்பதியிடமிருந்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் 2 லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.