தமிழ்நாடு

முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவால் காலமானார்

Sinekadhara

முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவு காரணமாக நாமக்கல்லில் இறந்தார். சர்க்கரை, சங்கம், தாகம், சுரங்கம், ஆகிய நாவல்களை இவர் எழுதியுள்ளார். 

1935 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இடதுசாரி சித்தாந்தந்தங்களை உள்ளடக்கி இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவரது புதினங்கள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்கள போன்ற அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயியாக, தொழிற்சங்க ஊழியராக, படைப்பாளியாக பல பரிமாணங்களில் இவர் இயங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பரமத்தி சின்னப்ப பாரதியின் சொந்த ஊராகும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் குடும்பம் வேலூருக்குச் சென்ற பிறகு திராவிடர் கழகம், தி.மு.க. மாநாடுகளின்பால் கவரப்பட்டார். மு. வரதராசன் எழுத்துக்களின் மீது இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பாரதியாரின் கவிதைகளும் பொதுவுடமைக் கட்சியும் நெருக்கமாயின. மாணவர் அமைப்புகளை, இயக்கங்களை நடத்தினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முழு நேர ஊழியராக 1960 ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கினார். கல்லூரி நாட்களில் நில உச்சவரம்புப் போராட்டத்திற்காக 650 கி.மீ நடைப்பயணம் சென்றார்.

சின்னப்ப பாரதி எழுதிய தாகம், சர்க்கரை, பவளாயி ஆகிய புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சங்கம் என்கிற புதினம் ஆங்கிலம் தவிர இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்கு 1986 இல் இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இவரது ஆறு நாவல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவர் எழுதிய சுரங்கம் என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் ஆகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இப்புதினத்தை சின்னப்ப பாரதி எழுதினார். இப்புதினம் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்களத்தில் வெளியாகியுள்ளது.

சின்னப்ப பாரதி சூன் மாதம் 13 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். நாமக்கல்-மோகனூர் சாலையில் முல்லைநகர் தேவாலயம் அருகில் மனைவி செல்லம்மாளுடன் இவர் வசித்துவந்தார்.

நாளை இறுதி நிகழ்வு நடக்க இருக்கிறது.

தகவல்: விக்கிபீடியா