WOW MADURAI நிகழ்ச்சி
WOW MADURAI நிகழ்ச்சி PT
தமிழ்நாடு

கட்டுக்கடங்காத கூட்டம்.. தள்ளுமுள்ளுவால் மறக்குமா நெஞ்சமாக மாறிய 'WOW MADURAI' கொண்டாட்ட நிகழ்ச்சி!

webteam

5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணாநகர் பகுதியில் "WOW MADURAI" என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் வாரத்தின் முதல் நாளான இன்று, மதுரை மாநகராட்சி ஏற்பாட்டின் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறையில் உரிய அனுமதி பெற்று HAPPY STEET நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதுரை மாநகராட்சி மட்டுமன்றி மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை அண்ணாநகர் முதல் மேலமடை வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டதால் கடுமையான நெருக்கடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் குவிந்த பல்லாயிரக்கான மக்கள்!

இந்த நிகழ்ச்சி காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கடந்த 10ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டு, நடிகர் சூரி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதாக கூறி இன்றைய தினம் நிகழ்ச்சி நடைபெற்றது .

காலை 7 மணிக்கு தொடங்கும் என்பதால் பொதுமக்கள் 5 மணி முதலாகவே அண்ணா நகர் பகுதிக்கு வருகை தர தொடங்கினர். இதனால் காலை 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும், ஆட்டம் பாட்டம் மற்றும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இருக்கும் என எதிர்பார்த்து வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

WOW MADURAI நிகழ்ச்சி

நடிகர் சூரி வருகை தந்த நிலையில் அமைச்சர்கள் நீல நிற பனியன் அணிந்து கொண்டும், மேயர் உள்ளிட்டோர் வருகை தருவதற்கும் தாமதமான நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 8.30 மணி ஆகியது. தொடர்ந்து அமைச்சர்களை வரவேற்பதாக கூறி பேசிக்கொண்டே இருந்தனர்.

இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அடுத்தடுத்து பொதுமக்கள் வருகை தர தொடங்கியதால் ஒரே இடத்தில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிக்கித் தவித்த பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது.

WOW MADURAI நிகழ்ச்சி

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் தாங்கள் வெளியேற வேண்டும் என காவல்துறையினரிடம் கெஞ்சியும் காவல்துறையினர் அமைச்சர்களை காரணம் காட்டி வெளியேற்றாததால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏமாற்றம்!

மாநகராட்சி சார்பில் 30 ஆயிரம் மேற்பட்டோர் வருகை தந்த நிலையில், அவர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில் வந்த பொதுமக்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

WOW MADURAI நிகழ்ச்சி

மேலும் நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் வந்து சென்ற அடுத்த நிமிடமே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு வந்த இளைஞர்களும் பெண்களும் ஒரு பாடல்கள் கூட போடாமல் தங்களை நிகழ்ச்சி ரத்து என கூறி அனுப்பி விட்டதாக தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு முன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

WOW MADURAI நிகழ்ச்சி

கூட்ட நெரிசலில் மின் கம்பங்கள் ட்ரான்ஸ்பார்ம்களில் ஆபத்தை அறியாமல் இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தூக்கி போட்டு விளையாடும் விபரீதமும், மேலும் அருகில் உள்ள திரையரங்குகளில் உயரமான சுவர்களில் ஏறி குதித்தும் சென்ற நிலை ஏற்பட்டது.

இது போன்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடைபெறும் என தெரிவிக்கப்படவில்லை!

இதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அந்த பகுதிக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது போன்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் முறையாக அந்தந்த பகுதிகளில் நடத்தப்படும் என மாநகராட்சி சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடாமல், ஒட்டுமொத்த மதுரைக்கும் இது ஒரே ஒரு நிகழ்ச்சி என்பது போல விளம்பரம் செய்யப்பட்டதால் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்களும் பெண்களும் கூடியதால் இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது.

soori

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர். இதில் சிலர் தடுப்புகளை உடைத்து உள்ளே விழுந்ததால் பலருக்கும் காயம் ஏற்பட்டது. கூட்ட நெருச்சலில் சிலருக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் அடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்திபோதும் கட்டுக்கடாங்காத கூட்டத்தால் நெருக்கடி ஏற்பட்டது.

WOW MADURAI நிகழ்ச்சி

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏர்.ரஹ்மான் நடத்திய தனியார் நிகழ்ச்சியில் முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் குளறுபடி ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில், மதுரையில் நடத்தப்பட்ட மாநகராட்சி நிகழ்ச்சியும் இது போன்ற குளறுபடி ஏற்பட்டுள்ளது நிர்வாக திறனை கேள்வி எழுப்பியுள்ளது.