தமிழ்நாடு

ஒசூர்: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நிகழ்ந்த சோகம் - மூச்சு திணறி தொழிலாளி பலி

சங்கீதா

ஓசூரில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது மூச்சு திணறி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (57). தொழிலாளியான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். மேலும் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் வேலையையும் அவர் செய்து வந்தார்.

இந்நிலையில், ஓசூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சண்முகம் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, மூச்சு திணறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.