தமிழ்நாடு

”எளிதாக பெண்களை ஏமாற்றும் உலகம்; யாரையும் எளிதாக நம்பாதீர்கள்” - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

webteam

தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துவருவது உண்மை, சட்டத்திற்கு முரணாக செயலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறுது, போதை பழக்க வழக்கமும், விற்பனையில் ஈடுபடுவதும் அதிகரித்துவருவதாக மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் லேடி டோக் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்தும் 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு' தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாணவிகளிடையே பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ‘’ முதலமைச்சர் அதிக கவனம் செலுத்தும் துறை மகளிர் உரிமைத்துறை தான், முதலில் மகளிர் உரிமைத்துறை என பெயர் மாற்றியவர், பெண்களை சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். குழந்தைகளுக்கு எதிரான குற்றசெயல்கள் அதிகரித்துவருவது உண்மை, இது ஊடகங்களின் வளர்ச்சியால் கூட இருக்கலாம்.

விரைவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறையும் என நம்புகிறோம். பெண்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என முதலமைச்சரே கூறியுள்ளார்.. அனைவருக்கும் தந்தையாக இருப்பேன் என முதலமைச்சரே கூறியுள்ளார், நீங்கள் அறிந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றால் புகார் அளிக்கலாம் ரகசியம் பாதுகாக்கப்படும், தைரியமாக புகார் அளிக்கலாம்.

பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் போன்றவற்றை தடுக்க 1098 எண்ணை தொடர்பு கொள்வோம், மத்திய அரசு இந்த எண்ணை மாற்ற முயல்வதாக தகவல் வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த எண் தான் தொடர்ந்து செயல்படும்.  

டீன் ஏஜ் பெண்கள் செல்போன்களை கவனமாக பயன்படுத்துங்கள், எளிதாக பெண்களை ஏமாற்றும் உலகமாக உள்ளது, யாரையும் எளிதாக நம்பாதீர்கள், செல்போன் பயன்படுத்துவது கவனம் தேவை, பெண்கள் விரும்புவதில் தவறில்லை, குடும்ப சூழலை எண்ணி செயல்படுங்கள், சிறந்த அறிவாற்றல் உள்ளவர்களாகவே மாற்றிக்கொள்ளுங்கள். 

போக்சோ இழப்பீட்டு தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 2021ஆம் ஆண்டில் மட்டும் 12கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, 1லட்சத்தி 13ஆயிரம் மாணவிகளுக்கு இது வரை வழங்கப்பட்டுள்ளது

முதலமைச்சர் பெண்களுக்கான 40% சதவித வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளார்.  சட்டத்திற்கு முரணாக செயலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறுது, போதை பழக்க வழக்கமும், விற்பனையும் அதிகரித்துவருகிறது, அதனை தடுக்க பெற்றோர்களுக்கும் சிறுவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும், கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் உயிரே போகும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும்’’ எனப் பேசினார்.