மதுரை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி ஒருமணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் மதுரையை சேர்ந்த பூர்ணிமாவும் அவரது இரண்டு குழந்தைகளும் வந்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போதும் பூர்ணிமா இறங்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர், ரயில் புறப்படும் நேரத்தில் சுதாகரித்துக் கொண்ட அவர் உடனடியாக இறங்க முற்பட்டுள்ளார்.
ஆனால், தூக்க கலக்கத்தில் இருந்த பூர்ணிமா, தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரதுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.
இதைப்பார்த்த பயணிகள் அவசர அழைப்பு செயினை பிடித்து இழுத்தனர். இதனால் சுதாரித்துகொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை லாவகமாக நிறுத்தினார். இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் பூர்ணிமாவை மீட்க முற்பட்டனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
இதையடுத்து பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அவர்கள் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிளாட்பாரத்தை உடைத்து பூர்ணிமாவை மீட்டனர்.
தொடர்ந்து பூர்ணிமாவை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் சென்னையில் இருந்து மதுரை வரக்கூடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாக இயக்கப்பட்டது.