தமிழ்நாடு

பாத்ரூம் செல்வதாக தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்..!

Rasus

ரயிலில் கழிவறை செல்வதாக நினைத்து, ஏறி இறங்கும் வழியில் தவறுதலாக சென்ற பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

சென்னையில் இருந்து நேற்றிரவு 9.15 மணிக்கு புறப்பட்ட காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில், பெங்களூர் கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த நடராஜன் அவரது மனைவி உமாதேவி ஆகியோர் தங்களது வீட்டிற்கு செல்வதற்காக பயணம் செய்துள்ளனர். ரயில் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் என்ற பகுதிக்கு நள்ளிரவு 12.52 மணிக்கு வந்துள்ளது. அப்போது தூக்க கலக்கத்தில் இருந்த உமாதேவி, கழிவறைக்கு செல்வதாக நினைத்துக் கொண்டு பயணிகள் ஏறி இறங்கும் வழியில் மாறுதலாக சென்றபோது திடீரென தடுமாறி ரயில் இருந்து கீழே விழுந்தார்.

இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள முட்புதரில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் உமாதேவி கிடந்துள்ளார். பின்னர் அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உமாதேவியை மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு தற்போது கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.