தமிழ்நாடு

சுத்தியால் பின்னந்தலையில் அடித்து பெண் படுகொலை.. சென்னையில் கொடூரம்

Rasus

வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணை உரிமையாளர் சுத்தியால் தலையில் அடித்து கொன்றுள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டை கலியபெருமாள் பஜார் தெருவைச் சேர்ந்தவர் கற்பகம்(40). இவர் இதற்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டை ரெக்ஸ் தெருவில் மோசஸ் ஷெராக் என்பவரது வீட்டில் 19 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

மோசஸ்சுக்கு திருமணமாகி சுகுணா என்ற மனைவியும் அனிஷா மேரி என்ற மகளும் உள்ளனர். இவரின் குடிப்பழக்கம் காரணமாக மனைவியும் மகளும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில் தான் கற்பகத்திடம் மோசஸ் குடிபோதையில் வாடகையை அதிகமாக்கி ரூ.2000 கேட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கற்பகம் தனது குடும்பத்தினருடன் வீட்டை காலி செய்து பஜார் தெருவில் குடியேறினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கற்பகம் தெரிந்தவர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த மோசஸ் வீட்டில் வைத்திருந்த சுத்தியால் பின்னாலிருந்து கற்பகம் தலையில் ஓங்கி அடித்துவிட்டு ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கற்பகத்தை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் கற்பகம் இறந்து போனார். இதையடுத்து சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மோசஸை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.