சென்னை அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருநீர்மலை தெற்கு மாட வீதி தெருவைச் சேர்ந்தவர் அனிதா(40), இவர் சமையல் செய்வதற்காக வீட்டின் பின்புறம் சென்று விறகு கட்டைகளை எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏதோ கடித்ததை போன்று உணர்ந்த அனிதா சிறு பூச்சி என்று நினைத்து சாதாரணமாக விட்டுள்ளார். பின் வீட்டிற்கு சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அனிதாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்த சென்று சிகிச்சை பெற்ற போது அனிதாவை பாம்பு கடித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அங்கு சிகிச்சை பெற்று வந்த அனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சங்கர் நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.