தமிழ்நாடு

சிறுமியைக் கடத்தி தன்பாலின உறவு - பெண் ஒருவர் கைது..!

Rasus

சிறுமியைக் கடத்தி தன்பாலின உறவு கொண்ட பெண் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் அடுத்துள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் ஜோதி என்பவரது மனைவி கலை அமுது (22). இவர் பிள்ளைத் தெருவாசல் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை (பள்ளி மாணவி) கடந்த 2-ம் தேதியன்று கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் ராணி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கலைஅமுது அந்தச் சிறுமியுடன் காணாமல் போனது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கலை அமுதுவின் செல்போன் எண்ணை போலீசார் ட்ராக் செய்தபோது அவர்  திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் என்னும் ஊரில் தங்கியிருப்பது தெரிய வந்தது. க்ரைம் போலீசார் அங்கு விரைந்து கலை அமுதுவை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டு இருவரையும் காரைக்கால் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கலை அமுது சிறுமியை கடத்திச் சென்று அவருடன் தன்பாலின உறவு கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறுமியை கடத்திச் சென்று தன்பாலின உறவு கொண்ட கலை அமுது (22) மற்றும் சிறுமியை காரில் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த கோட்டுச்சேரியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ் (26) ஆகிய இருவரையும் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், இருவரையும் காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சுரேஷ் காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கலை அமுது புதுச்சேரி காலாப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காரைக்கால் மதகடியை சேர்ந்த கணேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.