தமிழ்நாடு

துன்புறுத்தும் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயன்ற பெண்

kaleelrahman

மனைவி மற்றும் மகள்களை அடித்து துன்புறுத்தி வரும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி எஸ்பி அலுவலகத்தில் மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் - மலர்க்கொடி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பந்தல் அமைக்கும் பணி செய்து வரும் சங்கர், வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளதை மலர்க்கொடி கண்டித்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்த கத்தியால் தாக்கியதாகக் கூறி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் மலர்க்கொடி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், புகாரை திரும்பப்பெறுமாறு சங்கர் மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 23ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்த சங்கர், மலர்க்கொடியை தாக்கி வீட்டில் இருந்த ரூ. 26 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார் இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சங்கர் மற்றும் அவரது சகோதரர் தனபால், மாமியார் கௌசல்யா ஆகியோர் தொடர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

எனவே அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி அலுவலகத்திற்கு வந்த மலர்க்கொடி தன்மீது மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது