தமிழ்நாடு

குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை காப்பாற்றிய 'சிங்கப்பெண்' - பாராட்டிய பொதுமக்கள்

kaleelrahman

நாகை அருகே குளத்தில் மூழ்கிய இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள குளத்தின் கரையில், அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து வழுக்கி குளத்தில் விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற எழிலரசி என்ற பெண் குழந்தைகள் இருவரும் தண்ணீரில் முழுகுவதை பார்த்த அவர், உடனடியாக தண்ணீரில்இறங்கி இரண்டு குழந்தைகளையும் பிடித்துக் கொண்டார்.

ஆனால், சிமெண்ட் சுவற்றில் ஏற முடியாமல் குழந்தைகள் இருவரையும் கையில் பிடித்தபடி நீண்ட நேரம் உயிருக்கு போராடியுள்ளார். தண்ணீர் ஆழமாக இருந்ததால் யாராலும் உதவி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தகவல் இருந்து அந்த குழந்தைகளின் தந்தை வேகமாக ஓடிவந்து தண்ணீரில் குதித்து இரண்டு குழந்தைகளையும் எழிலரசியையும் காப்பாற்றினார்.

தனது உயிரை துச்சமென நினைத்து குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசியை அப்பகுதி பொதுமக்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.