தமிழ்நாடு

சிவகாசி: இரு கிராமத்தினர் இடையே பிரச்னை - சாலைமறியலில் பெண் போலீஸ் மண்டை உடைப்பு

Sinekadhara

சிவகாசி அருகே சாலைமறியலின்போது பெண் போலீசின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகேயுள்ள துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வேந்திராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்ததைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அவர்களை சராமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சக்தி என்பவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர்களைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துலுக்கப்பட்டி கிராமமக்கள், அங்குள்ள பிரதான சாலையில் சுமார் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு துணை காவல் கண்காணிப்பாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சாலைமறியல் கைவிடப்பட்டது. கூட்டத்தில் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவரைத் தடுத்த பெண்காவலரை கடுமையாகத் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்ததால், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இதனால் தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்திவருகிறார்.