தமிழ்நாடு

“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்

webteam

பிரபல தினசரி நாளிதழ் மூலம் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, போரூரை சேர்ந்தவர் முருகன் (58). இவர் கடந்த பத்து ஆண்டுகளாக பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். பெண்களை ஏமாற்ற இவர் தீட்டிய திட்டம் தான், நாளிதழ் விளம்பரம். பிரபல தினசரி நாளிதழில் திருமணத்திற்கு பெண் தேவை. அதுவும் 35 வயதுக்கு மேலான பெண்கள் மட்டும் தேவை என விளம்பரம் செய்வது, முருகனின் வேலை. அதைப்பார்த்து திருமண ஆசையில் போன் செய்யும் பெண்களை, நேரில் சந்தித்துதான் ஒரு பணக்காரர் போலவும், தொழில் அதிபர் போலவும் காட்டிக்கொள்வார். 

பின்னர் அந்தப் பெண்களை ஏமாற்றி, ஒன்றாக வசிப்பார். திடிரென ஒருநாள் தனது உடைமைகளை மற்றும் அந்தப் பெண்ணின் நகை, பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார். இவ்வாறு பல பெண்களை 10 வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில்தான் ஓசூரை சேர்ந்த ஏமாந்த பெண் ஒருவர் தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் முருகனை தேடி வந்த காவல்துறையினர், இன்று அவரை வளைத்துப்பிடித்து கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் இஎம்ஐ நம்பர் மூலம் அவர் பிடிபட்டார்.

அவரிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் 50 மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன அத்துடன் சில ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதேபோன்று இதற்கு முன்னரே மூன்று வழக்குகள் முருகன் மீது பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டுள்ளார். இந்நிலையில்தான் அவர் பிடிபட்டுள்ளார்.

தீவிர விசாரணை நடத்தி முருகனை பிடித்த, உதவி ஆய்வாளர்கள் கஜபதி, சையது உள்ளிட்ட தனிப்படை காவல்துறையினரை, பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி பாராட்டினார்.