பெருங்குடி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை, கால் யாருடையது என்ற விசாரணையில் சென்னை காவல்துறையினர் தீவிரமடைந்துள்ளனர்.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 21-ஆம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு வந்த லாரியில், ரத்தம் படிந்த நிலையில் பெண்ணின் வலது கையும், 2 கால்களும் துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்குப் பைக்குள் கண்டெடுக்கப்பட்டன. தலையும், உடலும் இல்லாததால், கொலை செய்யப்பட்ட பெண் யார் என அடையாளம் தெரியவில்லை.
மிகவும் சிக்கலாக கருதப்படும் இந்த வழக்கில், உடலுறுப்புகளை வைத்து கொல்லப்பட்ட பெண் யார் என கண்டறிய விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. வெட்டப்பட்ட கையின் விரல் ரேகையை வைத்து பெண் யார் என்பதை கண்டறிந்துவிடலாம் என திட்டமிட்ட காவலர்கள், அரசின் ஆதார் அமைப்பின் உதவியை நாடினர். ஆனால், இறந்த செல்கள் மூலம் கைரேகை விவரங்களை துல்லியமாக பெறமுடியாது என ஆதார் அமைப்பு கைவிரித்துவிட்டதால், முதல் முயற்சியிலேயே காவல்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வெட்டப்பட்ட பெண்ணின் உடலுறுப்புகள் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து வந்த குப்பை லாரியில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. கொலை செய்த நபர், அப்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு குப்பை தொட்டியில், கை, கால்களை வீசிச் சென்றிருக்கலாம் என்பது காவல்துறையின் சந்தேகம். அதனால், அந்த மண்டலத்திற்குட்பட்ட 16 வார்டுகளில், ஆயிரத்து 280 குப்பை தொட்டிகளுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
துண்டாக்கப்பட்ட அந்த கையில் சிவன் பார்வதி படமும், ட்ராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த தகவல்களை வைத்தும், வெட்டப்பட்ட கை, கால்கள் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைப் பையில் உள்ள முகவரியை வைத்தும் ஏதேனும் தகவல் கிடைக்குமா என விசாரணையை தீவிரப்படுத்தியது. ஆனால், அதிலும் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிய, சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும், காணாமல் போன பெண்களின் விவரங்களைச் சேகரித்து விசாரித்தனர். அத்துடன் பெண்ணின் காலில் மெட்டி இருந்ததால், கல்யாணம் ஆகிய காணாமல் பெண்களை பட்டியலில் தேடினர்.
அந்த வகையில் தற்போது கர்நாடகாவை சேர்ந்த காணாமல் போன பெண் ஒருவரின், தகவல்கள் குப்பைத் தொட்டியில் கிடைத்த கை, கால்களுடன் ஒத்துப்போவதாக தெரியவந்துள்ளது. இதனால் சென்னை சேர்ந்த தனிப்படை காவல்துறையினர், கர்நாடகா விரைந்துள்ளனர். அங்கு சென்றதும் காணாமல் போன பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் பெண் யாரென்று உறுதி செய்யப்பட்டால், பின்னர் கொலையாளிகள் யார் என விசாரணை தொடங்கப்படும்.