உயிரிழந்த பெண்
உயிரிழந்த பெண்  PT WEB
தமிழ்நாடு

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் செய்தகாரியம்!

விமல் ராஜ்

சென்னை குன்றத்தூரை அடுத்துள்ள ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தம் (42). இவரது மனைவி ரேவதி (39). இவர்களுக்குத் திருமணமாகி இதுவரை குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரேவதி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியே சென்றிருந்த அவரது கணவர் வீடுதிரும்பியபோது, ரேவதி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மனைவியின் இறுதிச் சடங்கை செய்வதற்கான பணிகளைச் செய்து வந்துள்ளார்.

ரேவதி

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு சென்ற தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட ரேவதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ரேவதி திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்துவந்த ரேவதி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை - மாதிரிப் படம்

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.