திருத்தணியில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி சுந்தரி (35). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். காலை வழக்கம்போல் தனது கிராமத்திலிருந்து திருத்தணி பூ மார்க்கெட்டுக்கு சென்று பூக்களை வாங்கிய சுந்தரி, பின்னர் சென்னை செல்வதற்காக இரண்டாவது ரயில்வே கேட் வழியாக சென்று கொண்டிருந்தார்.
செல்போன் பேசியபடியே அவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரேணிகுண்டா பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவேக விரைவு ரயில், சுந்தரி மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சுந்தரி உயிரிழந்தார். இரண்டாவது மற்றும் முதல் ரயில்வே கேட் வழியாக கடக்கும் போது பெரும்பாலான மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்போன் பேசியபடி கடப்பதால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடந்தது வருவதாக பயணிகள் கூறுகின்றனர்.
எனவே ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால்தான், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் பயணிகள் கூறுகின்றனர்.