தமிழ்நாடு

இரண்டாவது திருமணம் செய்துவிட்டு ஏமாற்றியதாக பெண் புகார் - எஸ்ஐ பணியிடை நீக்கம்

webteam

பெண்ணை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜ்குமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார். இவர் மீது கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் பகுதியைச் சேர்ந்த பெண், நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் 'நான் களியக்காவிளை பகுதியில் உள்ள வைத்திய சாலையில் பணிபுரிந்து வந்தேன். அப்போது களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜ்குமார் அடிக்கடி வைத்திய சாலைக்கு வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

ஏற்கனவே அவருக்கு முதல் மனைவி இருக்கும் நிலையில், என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். மேலும் என்னிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புகார் மனு குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உதவி ஆய்வாளர் ராஜ்குமாரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.