தமிழ்நாடு

குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை! குடிபோதை கணவரால் நேர்ந்த துயரம்

webteam

குடும்ப தகராறு காரணமாக 4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உள்ள கீழ்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி புஷ்பா(27). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு 9 ஆண்டுகள் ஆகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் கேஸ் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை செய்து வந்த கன்னியப்பன், கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

வேலையில்லாததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கன்னியப்பனுக்கும் புஷ்பாவிற்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பா தனது 4 வயது குழந்தையுடன் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி கீழ்வாலை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை மனைவி வீட்டில் இல்லை எனத் தெரிந்த கணவர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது கிணற்றின் அருகே மனைவியின் செருப்பு மற்றும் கைபேசி இருந்ததை அடுத்து அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கிணற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.