தமிழ்நாடு

தடுக்கப்படுமா இந்த துயரம்! - மரக்காணம் கடற்பகுதியில் தொடர்ந்து உயிரிழக்கும் ஆமைகள்!

webteam

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்பகுதியில் முட்டையிட வரும் ஆமைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை, மரக்காணம் பகுதியில் உள்ள கடலோரப் பகுதிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆமை இனங்கள் முட்டை இடுவது வழக்கம். அவ்வாறு இடப்படும் முட்டைகள், குறிப்பிட்ட வெப்பநிலையில் ஓரிரு மாதங்களுக்குள் ஆமை குஞ்சுகளாக பொரிந்து மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். இந்நிலையில், சில சமூக விரோதிகள் ஆமை முட்டைகளை கைப்பற்றி கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்வதை தடுப்பதற்காக வனத்துறையினர் ஆமை முட்டைகளை பறிமுதல் செய்து செயற்கை முறையில் அவற்றை பொரியச் செய்து மீண்டும் கடலுக்குள் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், தடை செய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் பயன்படுத்துவதாலும், ஆமைகள் முட்டையிடவதற்கு வந்து செல்வதற்கு ஏதுவாக இருந்த இடங்களில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்ததாலும் ஆமைகள் கடலுக்குள் இருந்து தரைப் பகுதிக்கு வந்து செல்வதில் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால் ஆமைகள் உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவே, மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் போதிய கவனம் செலுத்தி ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என கடல்சார் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஆமைகள், மரக்காணம் பகுதியில் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.