cm vijay x page
தமிழ்நாடு

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய்?

தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், சட்டசபையில் மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

Prakash J

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை கோரும் வக்கெடுப்பு இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கான இடங்களைப் பெறுவதற்காக தவெக, பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. அந்த வகையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கின. இதைத் தொடர்ந்து 120 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியதால் அழைப்பு விடுத்த தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், சட்டசபையில் மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இதற்கிடையே, மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். பின்னர், மறுநாள் மே 11ஆம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். மேலும், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்தி, சட்டப்பேரவையில் இன்று விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கூட்டம் ஆரம்பமானதும் முதலமைச்சர் தனது அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக விளக்கும் தொடக்க உரையை நிகழ்த்துகிறார். அதன் பின்னர் நம்பிக்கை தீர்மானம் சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதில் அவையில் உள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்டு சரிபாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும். குரல் வாக்கெடுப்பு மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ வாக்கெடுப்பு நடத்தப்படலாம். தற்போதுள்ள நிலையில் விஜய்க்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இதனால், விஜய் தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.