ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் கைகளில் கயிறு மூலம் 6 முறை சுருக்க போட முயன்றும் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தை 26 அடியில் சிக்கியிருந்தது. குழந்தை சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இரண்டு பயன்படுத்தப்பட்டன. குழந்தை மீட்கப்பட்ட உடனே சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸும், மருத்துவக் குழுவும் தயார் நிலையில் இருந்தன. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வருகை தந்தனர். அவர்கள் ஆலோசனைப்படி மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து மீட்புப் பணிக்காக மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர் கொண்டுவந்த பிரத்யேக கருவி பயன்படுத்தப்பட்டது.
அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு, குழந்தையின் ஒரு கையில் சுருக்கு போடப்பட்டது. ஆனால் மற்றொரு கையில் சுருக்குப்போட முடியவில்லை. நீண்ட போராட்டம் சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து கோவையில் இருந்து மற்றொரு மீட்புக்குழுவினர் வருகை தந்தனர். இரண்டு குழுக்களும் இணைந்து இரு கைகளிலும் சுருக்கு மாட்ட முயன்றனர். ஆனால் 6 முறை முயன்று குழந்தையின் கைகளில் சுருக்கு மாட்ட முடியவில்லை. இதனால் ஆழ்துளை கிணறுக்கு அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கிடையே அங்கே கூடியிருந்த மக்கள் மற்றும் சுர்ஜித்திற்காக பிரார்த்தனை செய்து வரும் மக்கள் சோகத்தில் உறைந்துள்ளனர். குழந்தை மீட்கப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது