தமிழ்நாடு

கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி தொடர்ந்த வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

kaleelrahman

கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரியும் மனைவி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நீலாவதி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''என் கணவர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி காணாமல் போனார். இருங்கலூர் கிணறு அருகே அவரது உடல் கிடந்தது. சமயபுரம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இட ஆக்கிரமிப்பு தொடர்பாக உறவினர் ஒருவர் அவருடன் சண்டையிட்டார். இதுகுறித்து என் கணவர் புகார் அளித்தார். என் கணவர் சாவில் மர்மம் உள்ளது. எனவே, என் கணவர் மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும், சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடித்து விரைந்து வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.