தமிழ்நாடு

பிறந்தநாளில் அழைத்தும் வீட்டிற்கு வராத மனைவி - விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!

webteam

சென்னையில் பிறந்தநாளில் கூட மனைவி வீட்டிற்கு வராததால், விரக்தியடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பெருமாள் நகர், 2வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (39). இவர் நுங்கம்பாக்கம் ஐபோன் செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். திருமணம் ஆகி ஏழு வருடங்களான நிலையில் அவ்வப்போது மனைவியுடன் சிறு சிறு குடும்பத் தகராறுகள் ஏற்படுவது உண்டு.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி இந்துமதி, அம்மா வீட்டில் இருந்ததால் நேற்று செல்போனில் மனைவியை அழைத்த ஜெய்கிருஷ்ணன் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். வீட்டிற்கு வரமுடியாது என செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து செல்போன் அழைப்பை ஏற்காமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் பிறந்தநாளில் கூட மனைவி வீட்டிற்கு வராமல் இருக்கிறாரே என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜெய்கிருஷ்ணன், வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடிக்கடி செல்போனில் அழைத்தும் கணவர் எடுக்க வில்லை என்பதால் சந்தேகமடைந்து வீட்டிற்கு வந்த பார்த்த மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கதவு உட்புறமாக சாத்தப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளெ சென்று பார்த்தபோது கணவர் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.