வெளிமாநிலம் சென்ற கணவர் வீடு திரும்பாததால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த வரதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (35). இவருக்கும் சுதா (28) என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, 9 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் வெளி மாநிலத்திற்கு வேலைக்கு சென்று, அங்கேயே தங்கிவிட்டார் எனக்கூறப்படுகிறது. இதனால் தனது இரு மகள்களுடனும் சுதா தங்கி வந்தார். இந்நிலையில் வெளி மாநிலத்தில் உள்ள தனது கணவரை சொந்த ஊருக்கு வரும்படி சுதா பலமுறை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார்.
ஆனால் முருகேசன் சொந்த ஊர் திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த சுதா, கடந்த 25ஆம் தேதி விஷக்காயை அரைத்து தனது இரு மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்துள்ளார். உயிருக்குப்போராடிய நிலையில் 3 பேரையும் மீட்ட உறவினர்கள், அவர்களை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சுதா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மகள்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். சுதா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)