தமிழ்நாடு

”மலேசியாவில் மர்மமான முறையில் கணவர் உயிரிழப்பு” திருவாரூர் ஆட்சியரிடம் மனைவி புகார் மனு

kaleelrahman

மலேசியாவில் மர்மமான முறையில் கணவர் உயிரிழந்திருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார் மனு அளித்துள்ளார். கணவரின் உடலை மீட்டு விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ராசப்பன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன். இவருக்கும் குடவாசல் அருகே உள்ள அகரத்திருநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யாவிற்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார்.

ஓட்டுநரான ராஜராஜன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிற்கு ஓட்டுநர் பணிக்காக சென்றுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சுகன்யாவிடம் ராஜராஜன் பேசியுள்ளார். அப்போது இந்த மாத இறுதியில் சொந்த ஊர் திரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ராஜராஜன் தொலைபேசியில் அழைக்கவில்லை, மேலும் அவரது அலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நீடாமங்கலம் காவல் துறையினர் ராஜராஜன் இறந்துவிட்டதாக சுகன்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகன்யா தனது உறவினர்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலேசியாவில் கணவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும், அவர் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் ராஜராஜனின் உடலை மீட்டு தமிழகம் கொண்டுவந்து உடற்கூறு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.