உயிரிழந்தவர்
உயிரிழந்தவர் புதியதலைமுறை
தமிழ்நாடு

சிவகங்கை: மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது விபத்தில் சிக்கி கணவன் கண் முன்னே உயிரிழந்த மனைவி!

PT WEB

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே முறையூரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் நாச்சியப்பன். இவரது மனைவி வளர்மதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஞ்சலக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், உடல் நலக்கோளாறால் அவதிப்பட்ட மனைவி வளர்மதியை அழைத்து கொண்டு காரைக்குடி அருகே உள்ள கேரளா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் கணவர் நாச்சியப்பன். இருசக்கர வாகனத்தில் சென்ற அவர்கள், காரைக்குடி வந்த அவர் திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வைத்தியசாலைக்கு செல்லும்போது, பின்னால் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனத்தில் உரசியதாக தெரிகிறது.

இதில் கணவன் மனைவி இருவரும் நிலை தடுமாறியதில், பின்னால் அமர்ந்து வந்த வளர்மதி கிரேனின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குன்றக்குடி காவல் நிலைய போலீஸார் வளர்மதியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை சிகிச்சைக்காக அழைத்துச்சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.