தமிழ்நாடு

நாமக்கல்: ஃப்ரீ பையர் விளையாடியதால் கண்டித்த மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு!

kaleelrahman

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஃப்ரீ பையர் விளையாடி கொண்டிருந்தை கணவனை மனைவி கண்டித்ததால், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வினோதினி. இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விலாங்காட்டூர் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சக்திவேல் ஃப்ரீ பையர் விளையாட்டில் ஆர்வம் கொண்டதால் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.

இதனால் நேற்று காலை சக்திவேலிடம் வேலைக்குச் செல்லுமாறு வினோதினி சொல்லியுள்ளார். இருப்பினும் சக்திவேல் அதை பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து மனைவி வினோதினி கணவனை கண்டித்து விட்டு குளிக்கச் சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது சக்திவேல் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதன் பின்னர், மனைவி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவி மற்றும் அவருடன் விளையாடி வந்த சக தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.