தமிழ்நாடு

“கணவரை காணவில்லை என புகார்” - தற்கொலை கடிதத்துடன் சடலமாக மீட்கப்பட்டதால் மனைவி அதிர்ச்சி

kaleelrahman

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிக்கு சென்ற உதவி செயற்பொறியாளரை காணவில்லை என மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அனல் மின் நிலையத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (36). இவர் வடசென்னை அனல் மின் 2வது நிலையில் உதவி பொறியாளராக பணியாற்றினார். இந்நிலையில், அனல்மின் நிலைய அதிகாரிகளின் அரசு குடியிருப்பில் தங்கி வேலை பார்த்ததோடு வார இறுதி நாட்களில் மட்டும் வீட்டிற்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அனல் மின் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் ஹரிகிருஷ்ணனின் மனைவிக்கு போன் செய்து ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி இளவரசி வேலைக்கு தான் சென்றுள்ளார், வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்து உடனடியாக அனல் மின் நிலையத்திற்கு நேரடியாக வந்து கேட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று வேலைக்கு வந்தவர் திடீரென காணமால் போனதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இளவரசி மீஞ்சூர் காவல் நிலையத்தில் காணாமல் போன தமது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காணாமல் போன உதவி பொறியாளரை கண்டுபிடித்து தருமாறு அவரது குடும்பத்தினர் அனல் மின் நிலைய வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைக்கு வந்தவர் எங்கு சென்றார் என மர்மமாக இருப்பதாவும், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் முறையாக பதிலளிக்கவில்லை என புகார் தெரிவித்தனர். ''பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தம் தாங்காமல் இங்கு மேற்கொண்டு பணியினை தொடர முடியவில்லை எனவும், குடும்பத்தாருடன் என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை, எனது குடும்பத்தை விட்டு பிரிகிறேன், இதற்கு யாரும் காரணம் இல்லை'' என ஹரிகிருஷ்ணன் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனல்மின் நிலையத்தில் இருந்து கைப்பற்றியதாக அதிகாரிகள் மீஞ்சூர் காவல் துறையினரிடம் அளித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் இருப்பது ஹரிகிருஷ்ணன் கையெழுத்து கிடையாது என அவரது குடும்பத்தினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனிடையே அனல் மின் நிலையத்தின் 2-வது மாடியில் ஹரிகிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் சென்று பார்த்தபோது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.