பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களுடன்..
பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களுடன்.. புதிய தலைமுறை
தமிழ்நாடு

"எனது கணவனை கைது செய்யுங்கள்" - மாவட்ட ஆட்சியரிடம் மனைவி பரபரப்பு புகார் - அதிர்ச்சி பின்னணி?

PT WEB

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இந்துமதி என்ற மகள் உள்ளார். இவர் பி.ஏ பட்டப்படிப்பு படித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர்  குமரவேல். இவர் சென்னையில் உள்ள  ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி  இந்துமதியைப்  பெண் கேட்டு வந்துள்ளார். இதனையடுத்து இந்துமதிக்கும் குமரவேலுக்கும் கடந்த 21.8.22 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 23 பவுன் தங்க நகை, 3 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாகக்  கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பின்பு குமரவேல்  வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாகத் திண்டுக்கல்லிலேயே சுற்றி வந்துள்ளதாக தெரிகிறது

இந்துமதி

இதனிடையே, தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு நகை போடவில்லை என்றும், கல்யாணத்தின்போது மைத்துனர்   மோதிரம் போடவில்லை என்று கூறி இந்துமதியைக் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்துத் துன்புறுத்தி  வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக்  கூறப்படுகிறது.

இதனையடுத்து தனது கணவர் குமரவேல் மற்றும் அவருடைய குடும்பத்தார் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் இந்துமதி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் சரியாக விசாரணை செய்யாமல் தட்டிக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இந்துமதியின் தந்தை காளியப்பன் பூச்சி மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காளியப்பனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் காளியப்பன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து தனது தந்தையின் இறப்புக்குக் காரணமான தனது கணவர் குமரவேல் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட இந்துமதி தனது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் பூங்கொடியிடம் புகார் அளித்தார்.

புகார் அளிக்க வந்தபோது இந்துமதியின் தாய் லட்சுமி திடீரென மயக்கம் அடைந்து தரையில் கீழே விழுந்தார். இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.