தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

webteam

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் மணியார் பாளையம் அருகே உள்ள கீழாத்துக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு புவனா(5) யமுனா(2) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று இரவு ஈஸ்வரனுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது இரண்டு பிள்ளைகளையும் கோபத்தில் அழைத்துக்கொண்டு வெளியே சென்ற ரேவதி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இரவு முழுவதும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று காலை ரேவதியும் அவரது 2 குழந்தைகளும் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் கரியாலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கரியாலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.