அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழியக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் .
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 24.09.2020 இரவு 11:30 மணி வரை கடல் நீர்மட்டம் 3.0 முதல் 3.6 மீட்டர் வரை எழும்பக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது