தமிழ்நாடு

10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தியது ஏன்?- அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் கேள்வி!

sharpana

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தியது ஏன் என மார்ச் 12ம் தேதி விளக்கமளிக்க, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நிர்பந்தித்ததை அடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இதை எதிர்த்து மாணவ - மாணவியர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது. இந்த பின்னணியில், இந்த இரு எம்.டெக். படிப்புகளுக்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதபிட ஒதுக்கீடு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், மத்திய அரசின் வேலைவேலைவாய்ப்புக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்க ஏதுவாக மட்டுமே பொருளாதார ரீதியில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாத நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக் படிப்புகளுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான நிலைபாட்டை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, கடந்த ஆண்டைப் போல மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் அமல்படுத்தாமல், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 இட ஒதுக்கீட்டையும் அறிமுகம் செய்தது ஏன்? என மார்ச் 12ம் தேதி விளக்கமளிக்கும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.