தமிழ்நாடு

நிர்பயா திட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

jagadeesh

நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக, நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த நிதியத்திற்கு, ஆரம்பகட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது.

நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட 190 கோடி ரூபாயில் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் செலவழித்துள்ளதாகவும், மீதி தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறி, இந்த நிதியை, 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர் மட்டக்குழு அமைக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு, இருப்பில் உள்ள நிதி எவ்வளவு? அந்த தொகை எப்படி செலவிடப்பட்டது? நிர்பயா நிதி ஏன் முழுமையாக பயன்படுத்தவில்லை? என்பன குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.