தமிழ்நாடு

கீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? : உயர்நீதிமன்றம்

கீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? : உயர்நீதிமன்றம்

webteam

கீழடி அகழாய்வில் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிந்தும் இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014-ம் ஆண்டு கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. நான்கு கட்டமாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி ஆய்வுப் பணியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல்வேறு அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சியின்போது தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தங்க ஆவரணங்கள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், மனிதஉடல் சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், சுடுமண் காதணி, இரும்பாலான போர்க் கருவிகள் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆச்சரியமளிக்கும் தொன்மையான நாகரீகங்கள் குறித்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 

மேலும் வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும் கீழடி தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளது. இதனால் 5-ஆம் கட்ட ஆய்வுப் பணிகளில் மேலும் பல தொல்பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான நிதியை மத்திய, மாநில அரசு இதுவரை ஒதுக்கப்படாததால் அகழவாராய்ச்சி பணிகள் துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அகழாய்வு பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அமர்நாத் ராமகிருஷ்ணன் பணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அகழாய்வு பணி முடிந்து அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ள நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணிமாற்றம் செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிந்தும், இந்த விஷயத்தில் மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அசாமுக்கு மாற்றப்பட்ட அமர்நாத்தை, 15 நாட்களில் தமிழகத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.