boat
boat pt desk
தமிழ்நாடு

தங்க கடத்தல் மாஃபியாக்கள் ராமநாதபுரம் கடல் பகுதியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?– மிரளவைக்கும் தகவல்கள்

webteam

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் கடத்தல் சர்வதேச மாஃப்பியாக்கள், தமிழகத்தில் உள்ள கடத்தல் காரர்களை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி வழியாக இலங்கைக்கு கடத்தி அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஹெராயின் ஐஸ் போதைப் பொருள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு மாற்றாக தங்கத்தை மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக கடத்தி வந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனங்களுக்கு கொடுப்பது அதிகரித்துள்ளது.

kanja bundle

தங்க நகை விற்பனையாளர்களும் இவ்வாறு இலங்கையிலிருந்து கடத்தி வரும் தங்கத்திற்கு வரி மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவைகள் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து சராசரி கிலோ ஒன்றிற்கு ரூ 6 முதல் 10 லட்சம் வரை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தை கடத்தல் காரர்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் ?

தனூஷ்கோடி, இலங்கைக்கு அருகேயுள்ளதால் மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆழம் குறைந்த பகுதி என்பதால், சுமார் 2 முதல் 4 மீட்டர் கடல் மட்ட உயரத்தில் செல்லும் திறன் கொண்ட பைபர் படகில் சென்றுவிடலாம். மேலும் அதிகபட்சமாக 45 நிமிடங்களில் இலங்கையை அடைந்து விடலாம் ஆகவே இந்த ஆழம் குறைந்த பகுதியை கடத்தல்காரர்கள் தேர்ந்தெடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் இந்திய கடற்படையினரோ அல்லது இலங்கை கடற்படையினரோ கடத்தல் காரர்களை பிடிக்க வாய்ப்பில்லை, இவர்கள் இலங்கை சென்று அங்கு தரையிறங்கும் போது அல்லது தமிழகத்தில் கரைக்கு வரும் போதுதான் கைது செய்யவோ அல்லது கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்யப்படுவது கடத்தல் காரர்களுக்கு ஒரு சாதகமான சூழலாக அமைந்துள்ளது.

gold

மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பு படையினரை கண்டவுடன் பொருட்களை கடலில் தூக்கி எறிந்தால் நீரோட்டம் காரணமாக அந்த பொருள் மாற்று திசை நோக்கிச் செல்லாது. ஏற்கனவே இது மணல் பகுதி என்பதால் கடலின் கீழ்மட்டத்திற்கு மட்டும்தான் செல்லும் ஆகவே இதனை அவர்கள் சாதகமாக பயன்படுத்தி பாதுகாப்புபடையினரை பார்த்தவுடன் ஜிபிஎஸ் அடையாளத்தை கணக்கிட்டு கடலில் தூக்கி எறிந்து விட்டு பின்பு அவர்களுக்கு சாதகமான ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் அதை எடுத்து விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது.

தற்போது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதிகள் மற்றும் ஹவாலா பணம் இந்தியாவிற்கு வருவதை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்துள்ளதால் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடத்தலை தடுப்பதில் எவ்வாறான சிக்கல் இருக்கிறது? - மாநில பாதுகாப்பு படையினர் கூறும் காரணம் என்ன?

பெரும்பாலும் இலங்கையிலிருந்து வரும் கடத்தல் தங்கத்தை தூத்துக்குடி மதுரை மற்றும் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் 98 சதவீதம் பறிமுதல் செய்யப்பட்டவை எனக் கூறப்படும் நிலையில், மெரைன் போலீசார் கியூபிரிவு போலீசார், மாவட்டகாவல் சிறப்பு பிரிவினர் உள்ளிட்டவருக்கு தகவல் கிடைத்தாலும் அவர்களால் நடுக்கடலில் சென்று கடத்தல் பொருள்களை கைப்பற்றும் அளவிற்கு ரோந்து படகுகளோ, அதற்குண்டான சாதனங்களோ இல்லை. இதனால் இவர்களால் கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்ய முடியவில்லை. கடத்தல் காரர்களுக்கு இவ்வாறான விஷயங்கள் முழுமையாக தெரிந்தபடியால் அவர்களுக்கு அச்சம் என்பதும் இல்லை எனவும் கூறப்படுகிறது

helicopter

கடத்தல் சம்பவம் குறித்து மாநில பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுப்பதால் தன்னைப் பற்றிய ரகசியங்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிந்து விடும் என்ற அச்சத்தால் தகவல்கள் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கொடுத்தால் ரகசியம் பாதுகாக்கப்படுவதாகவும் அதற்கான ஊக்கத் தொகையும் கிடைக்கும் என்பதால். கடத்தல் சம்பவம் குறித்த தகவல்களை முன்வந்து சொல்வதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இங்கு பணியாற்றி வரும் மாநில பாதுகாப்பு அதிகாரிகள் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேலாக ஒரே துறையில் பணியாற்றுவதால் உறவுமுறை வளர்த்துக் கொண்டுள்ளதால் கடத்தலை கட்டுப்படுத்த இயலாமைக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கடத்தல் மற்றும் அந்நிய ஊடுருவலை தடுக்க சர்வதேச கடல் பகுதியில், ஆழம் குறைந்த பகுதியில் இயக்கக் கூடிய பைபர் படகு அல்லது பலூன் ரோந்து படகு மூலம் இலங்கை - இந்தியா கடற்படையினர் கூட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்தும் பட்சத்தில் இவ்வாறான கடத்தலை தடுக்க வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் காலங்காலமாக பண்டமாற்று முறை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. யுத்த காலத்திற்கு முன்பு தமிழகத்திலிருந்து மிளகாய், மல்லி, புளி, லுங்கி போன்ற பொருள்களை எடுத்துச் சென்று இலங்கையில் இருந்து சோப்பு தேங்காய் எண்ணெய், ஜவுளி கிராம்பு, உள்ளிட்டவைகளை கொண்டு வந்து வர்த்தகம் செய்து வந்தனர். அதேபோல் டீசல், பெட்ரோல் ஆயுதங்கள், கடத்தப்பட்டு வந்தன, யுத்தத்திற்குப் பின்பு கொரோனா காலத்தில் விரலி மஞ்சள், மஞ்சள் பொடிகள் வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்டவைகள் கடத்தி செல்லப்பட்டது.

gold

தற்பொழுது கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கம் , போதைப் பொருள்கள் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.