நீதிபதி அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டும், இன்னும் அமல்படுத்தாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.-ஆக இருந்தவர் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழக அரசின் அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டுமென உத்தரவிட்டார். இதற்கு முன்னுதாரணமாக தான் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், நீதிமன்றத்தில் உள்ள தனது அறையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும்படி பிப்ரவரி 14ஆம் தேதியன்று நீதிமன்ற நிர்வாக பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நான்கு வாரங்கள் கடந்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தாதது குறித்து நீதிமன்ற நிர்வாக பதிவாளரை அழைத்து விளக்கம் கேட்ட நீதிபதி, அதற்கு நிதி இல்லை என விளக்கம் அளித்தாக தெரிகிறது. இதனால் உயர்நீதிமன்றத்தில் நிதி இல்லாவிட்டால் தனது அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் செலவை தானே ஏற்றுக் கொள்வதாகவும்; நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பும், தன் அறையில் பொருத்த வேண்டுமென்ற உத்தரவும் பதிவாளரின் கவனத்துக்கு வரவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதுகுறித்தும் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தனது நீதிமன்ற விசாரணையை இணையதளத்தில் வெப்-காஸ்டிங்க் மூலம் ஒளிபரப்ப தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற நீதிபதி அறைகளின் உள்கட்டமைப்பு நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது, அதில் எவ்வளவு செலவிடப்பட்டது என்ற விவரங்கள் குறித்தும் பதிலளிக்கவும் நிர்வாக பதிவாளருக்கு நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.மேலும் நீதிமன்றம், நீதிமன்ற வளாகம், விசாரணை அறை போல நீதிபதிகளின் அறைகளையும் பொது இடமாக தான் கருத வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.