செய்தியாளர் - M. மீரா
தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், ஜூலை 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து ஜூலை 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாகல் செய்யப்பட்டது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். இதனைத் தொடர்ந்து இன்று முதல் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நடந்து வருகிறது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். மேலும் விவசாயிகள் பாதிப்பு, பெங்களூர் பயணம் , அனைத்துக் கட்சி கூட்டம் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்,
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி நமக்கு உயிர் ஆதாரம். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் இல்லை; அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் அனைவரும் இணைந்து இயற்றிய தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். காவிரி நதி நீர் விவகாரத்திலும், மேகதாது அணை விவகாரத்திலும் தமிநாட்டின் உரிமையை நம் அரசு விட்டு கொடுக்காது.
கர்நாடகத்தில் சில அணைகள் கட்ட தொடங்கியது பற்றி 1969 இல் விவாதம் நடந்தது. அப்போது நீர் வளத்துறை அமைச்சர் யார்? அணை கட்ட விட்டது யார்? என்று மலிவான அரசியல் பண்ண விரும்பவில்லை. காவிரி விவகாரத்தில் யாருக்கு பெருமை என்றெல்லாம் பார்க்கக்கூடாது தமிழக மக்களின் உரிமை தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழக அரசு விட்டு தராது.
இந்தக்காலக்கட்டத்தில் பல பகைமை நாடுகளே பிரச்னைகளை பேசி தீர்த்து வருகின்றன. அந்தவகையில் தான், காவிரி நதி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் பற்றி பக்கத்து மாநிலத்தில் பேசி பார்க்கலாம் என்று நினைத்தேன். அந்தக் கருத்தை நானே முன்வைத்தேன். நேர்மறையாக நடந்தால் நல்லது; அவமானம் நடந்தால் தமிழ் நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக இருந்தேன்.
விவசாயிகளுக்கான குறுவை சாகுபடிக்கு நிவாரணம் ஏற்கனவே கொடுத்து விட்டோம். அரசியலே நாங்கதான் என்பவர்கள் பேப்பர் படித்திருந்தாலே நாட்டில் என்ன நடந்திருக்கும்னு தெரிஞ்சிருக்கும் என்றார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீங்கள் கொடுத்தது சிறப்பு தொகுப்புதான்; வறட்சி நிவாரணம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் வரைக்கும் பார்த்துவிட்டுதான் வறட்சி நிவாரண நிதி அறிவிப்பது வழக்கமாகும் என்று கூறினார். .
மீண்டும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அனைத்து கட்சி கூட்டத்தை ஏன் கூட்ட பயம்.. ஏன் கூட்டவில்லை என்று கேள்வி எழுப்பினார். இவ்வாறு, சட்டப்பேரவையில் தொடர்ச்சியான விவாதங்கள் நடந்து வருகின்றன.